ஆல்பிரட் நோபலின் நினைவாக 2019 ஆம் ஆண்டின் பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசானது அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டப்லோ மற்றும் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார அறிவியலில் நோபல் நினைவு பரிசானது அலுவல்பூர்வமாக ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு என்று அறியப் படுகின்றது.
"உலகளவில் வறுமையை ஒழிப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட சோதனை அணுகுமுறைக்காக" அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
டப்லோ என்பவர் பானர்ஜியைத் திருமணம் செய்து கொண்டார். மேலும் 2011 ஆம் ஆண்டில் “மிக மோசமான பொருளாதாரம்: வறுமை குறித்து மீண்டும் சிந்தித்தல் மற்றும் அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழிகள்” என்ற மிகப் புகழ்பெற்ற புத்தகம் ஒன்றையும் டப்லோ எழுதியுள்ளார்.
இத்தம்பதியினர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். மைக்கேல் கிரெமர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றார்.
2009 ஆம் ஆண்டில் எலினோர் ஆஸ்ட்ரோமிற்குப் பிறகு, பொருளாதாரத்தில் நோபல் பரிசை வென்ற இரண்டாவது பெண் டப்லோ ஆவார்.
இந்தப் பரிசு பெற்றவர்களால் பயன்படுத்தப்பட்ட “புதிய, சக்திவாய்ந்த கருவி” என்பது சீரற்ற கட்டுப்பாட்டுச் சோதனைகளின் பயன்பாடு (Randomised Control Trials - RCTs) ஆகும்.
மருந்துகளின் விளைவுகளைச் சோதிப்பதற்காக RCTகள் பெரும்பாலும் மருத்துவத்தில் பயன்படுத்தப் பட்டன.
தமிழ்நாட்டுடன் தொடர்பு - அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு ஆய்வகம் (Abdul Latif Jameel Poverty Action Lab - J-Pal)
அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டப்லோ ஆகியோர் நல்லாட்சியை மேம்படுத்துவதற்காக தமிழக அரசுடன் இணைந்து கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர்.
அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு ஆய்வகமானது இந்தத் தம்பதியினரால் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டது.
தற்போதைய அல்லது புதிய திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கும் அவற்றைக் கண்காணிப்பதற்கும் ஒரு முடிவு/விளைவு அடிப்படையிலான அணுகுமுறையை பின்பற்றுவதற்கும் உள்திறனை வளர்ப்பதில் J-Pal அமைப்பானது அரசாங்கத்திற்கு உதவுகின்றது.
அபிஜித் பானர்ஜி பற்றி
அபிஜித் விநாயக் பானர்ஜி (பிறப்பு 1961) என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பொருளாதார நிபுணர் ஆவார்.
1981 ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத் துறையில் அவர் பிஎஸ்சி பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் 1983 ஆம் ஆண்டில் தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறையில் அவர் எம்.ஏ. பட்டம் பெற்றார்.
"தகவல் பொருளாதாரத்தில் கட்டுரைகள்" என்பது குறித்து முனைவர் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டதன் மூலம் ஹார்வர்டில் பொருளாதாரத் துறையில் அவர் முனைவர் பட்டம் பெற்றார்.
எஸ்தர் டப்லோ மற்றும் தமிழ்நாட்டில் பிறந்த அமெரிக்கப் பொருளாதார நிபுணரான செந்தில் முல்லைநாதனுடன் இணைந்து இவர் 2003 ஆம் ஆண்டில் J-Pal நிறுவனத்தை நிறுவினார்.