எத்தியோப்பியப் பிரதமரான அபி அகமது 2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை வென்றுள்ளார்.
அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்கான அவருடைய முயற்சிகளுக்காகவும் அண்டை நாடான எரித்திரியாவுடனான நீண்டகால மோதலைத் தீர்ப்பதற்காக அவர் எடுத்த நடவடிக்கைகளுக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
எத்தியோப்பியாவும் எரித்திரியாவும் 1998 முதல் 2000 வரை தங்களுடைய எல்லையில் போரில் ஈடுபட்டன. நீண்ட காலப் பகையாளிகளான இந்த இரு நாடுகளுக்கிடையே விரோதமானது பல ஆண்டுகளாக தொடர்ந்தது.
2018 ஆம் ஆண்டு ஜூலை 9 அன்று, எரித்திரியாவின் தலைநகரான அஸ்மாராவில் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பைத் தொடர்ந்து, அபி அகமது மற்றும் எரித்திரிய அதிபர் இசையஸ் அஃப்வெர்கி ஆகியோர் கடந்த 20 ஆண்டுகால மோதலை முறையாக முடிவுக்குக் கொண்டு வந்தனர்.