TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 15 , 2019 1863 days 731 0
  • நிலத்தடி நீர் மேலாண்மை தொடர்பாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்திலிருந்து இறுதி ஒழுங்குமுறை அனுமதியை குஜராத்தைச் சேர்ந்த அதானி குழுமம் பெற்றுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் விமர்சனத்திற்குள்ளான தனது கார்மிச்சல் நிலக்கரி சுரங்கத் திட்டம் மீதான பணியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
    • பெருந் தடுப்புப் பவளத் திட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்துதல் மற்றும் அதிகப்படியான கார்பன் உமிழ்வுகள் ஆகியவை இத்திட்டத்திற்கு எதிராக எழுப்பப்பட்ட விமர்சனங்களாகும்.
  • புதிதாகப் பதவியேற்றுள்ள மோடி அரசு, தொலைத் தொடர்பு அலைவரிசையின் மிகப் பெரிய அளவிலான ஏலத்திற்குத் திட்டமிட்டுள்ளது. இந்த ஏலத்தின் மூலம் ஏறத்தாழ ரூ. 6 லட்சம் கோடி நிதியைத் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இது கிராமப்புறப் பகுதிகளில் இழையிலிருந்து வீட்டிற்கு இணைய வசதியை அளித்தல் உள்ளிட்ட ஐந்தாம் தலைமுறை சேவைகளை மலிவு விலையில் அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
  • மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சரான பிரகலாத் சிங் படேல், “அஸ்தித்வா : பிரபாகர் பார்வேயின் சாராம்சம்” என்ற ஒரு கண்காட்சியை புது தில்லியில் உள்ள தேசிய நவீனக் கலைக் கூடத்தில் தொடங்கி வைத்தார்.
    • 1976 ஆம் ஆண்டு லலித் கலா விருது பெற்றவரான பிரபாகர் பார்வே என்பவர் நவீன இந்திய ஓவியத்தின் முன்னோடியாக விளங்கினார்.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அரியானாவின் குருகிராமில் ஸ்வீப் (Systematic Voters’ Education and Electoral Participation program) என்ற திட்டத்திற்கான பிரத்தியேக அதிகாரிகளுக்கான இரண்டு நாட்கள் கருத்தரங்கானது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது.
    • வாக்காளர்களுக்கான முறைசார்ந்த கல்வி மற்றும் தேர்தல் பங்கெடுப்புத் திட்டம் (Systematic Voters’ Education and Electoral Participation program - SVEEP) என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் திட்டமாகும்.
  • கம்போடியாவின் தகவல் துறை அமைச்சகம் மற்றும் ஒளிபரப்பு வளர்ச்சிக்கான ஆசிய-பசிபிக் நிறுவனம் (AIBD - Asia-Pacific Institute for Broadcasting Development) ஆகியவை இணைந்து 2019 ஆம் ஆண்டின் 16-வது ஆசிய ஊடக மாநாட்டை கம்போடியாவின் சியேம் ரீப் மாகாணத்தில் நடத்தின.
    • போலிச் செய்திகளைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை கண்டறிவதற்காக ஓராண்டு கால அளவுடைய ஒரு ஆராய்ச்சித் திட்டமான ”அங்கோர் போலிச் செய்திகள் முன்னெடுப்பு’ என்ற ஒரு திட்டமும் அப்போது தொடங்கப்படவிருக்கின்றது.
  • கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கெக்கில், அந்நாட்டின் உயரிய விருதான “முதலாவது பிரிவின் மானஸ் ஆணை” என்ற பட்டம் சீன அதிபர் சி ஜின்பிங்கிற்கு வழங்கப்பட்டது.
    • 2019 ஆம் ஆண்டின் ஜுன் 14 ஆம் தேதியில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்” மாநாட்டை கிர்கிஸ்தான் நடத்திக் கொண்டிருக்கின்றது.
  • ஹரியானாவின் குருகிராமில் இந்தியக் கடற் பிராந்தியத்தின் தகவல் பிணைப்பு மையத்தின் கீழ் “2019 ஆம் ஆண்டின் கடல்சார் தகவல் பகிர்வுப் பயிலரங்கத்தை” இந்தியக் கடற்படை நடத்தியது.
    • இரண்டு நாட்கள் நடைபெறக்கூடிய இந்தப் பயிலரங்கம் கடற்படை அதிகாரிகளுக்கான துணைத் தலைவர் மற்றும் கடற்படை துணைத் தளபதியான எம்எஸ் பவார் என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் (UNICEF - United Nations International Children’s Fund) அமெரிக்கப் பிரிவினால் அதன் பனித் திவலைப் பந்து நிகழ்வின் போது (Snowflake Ball) அந்த அமைப்பின் டேனி காயே மனித நேய விருதானது நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு வழங்கப்படவிருக்கின்றது.
    • UNICEF அமைப்பானது இரண்டாம் உலகப் போரின் போது பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை அளிப்பதற்காக 1946 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைமையகம் நியூயார்க்கில் அமைந்துள்ளது.
  • பயனாளியின் அந்தரங்கததை மீறக்கூடிய ஒரு கட்செவிப் பிழையைக் கண்டறிந்ததற்காக, 2019 ஆம் ஆண்டின் முகநூல் வாழ்த்தரங்கில் (ஹால் ஆப் பேம்) மணிப்பூரைச் சேர்ந்த ஒரு கட்டிடப் பொறியாளரான சோனெல் சவ்காய்ஜாம் என்பவர் இணைந்துள்ளார்.
    • கட்செவி வழியாக பேச்சுத் தொடர்பின் போது இந்தப் பிழையானது அடுத்த முனையில் உள்ளவரின் அனுமதி மற்றும் தகவல் எதுவும் பெறாமலே அந்தப் பேச்சுத் தொடர்பை காணொளித் தொடர்பாக மாற்றுகின்றது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்ற அமீரக மறுசுழற்சி விருதுகளின் 22-வது பதிப்பின் போது “மறுசுழற்சி விருதுகளின் சுற்றுச்சூழல் வெற்றியாளர்கள்” என்ற விருது 8 வயது நிரம்பிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியா டோனி என்பவருக்கு வழங்கப்பட்டது.
    • மொத்தம் 14,914 கிலோ கிராம் அளவுள்ள காகிதக் கழிவுகளைச் சேகரித்ததற்காகத் தனிநபர் பிரிவின் காகிதப் பிரிவில் இவர் இந்த விருதை வென்றுள்ளார்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI - Reserve Bank of India) கானா மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு விவசாயம் மற்றும் இரயில்வேத் திட்டங்களுக்கு 245 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான கடனை இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி வழங்கும் என்ற அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
  • போர்ப்ஸ் பத்திரிக்கையினால் தொகுக்கப்பட்ட “உலகின் மிகப்பெரிய 2000 பொது நிறுவனங்களின்” பட்டியலில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் தொழிற் நிறுவனமானது இந்திய அளவில் முதலாவது இடத்திலும் சர்வதேச அளவில் 71-வது இடத்திலும் உள்ளது.
    • இந்த சர்வதேசப் பட்டியலில் தொடர்ந்து 7-வது முறையாக சீன தொழிற்துறை மற்றும் வணிக வங்கி முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்