தனியார் துறையில் தொகுதி சி மற்றும் தொகுதி டி பிரிவின் கீழ் உள்ள பணிகளில் கன்னட மொழி பேசும் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக 1961 ஆம் ஆண்டின் கர்நாடகத் தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலை ஆணைகள்)விதிகளைத் திருத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
சரோஜினி மஹிஷி அறிக்கையானது கன்னட மொழி பேசும் மக்களுக்கு தனியார் துறைப் பணிகளில் முன்னுரிமை வழங்கப் பரிந்துரைத்துள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமானது ஹைதராபாத் விமான நிலையத்தில் வாகன நிறுத்தப் பயன்பாடுகளுக்கு ஃபாஸ்டேக்குகளைப் (FASTags) பயன்படுத்துவதற்காக ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. “ஃபாஸ்டேக் 2.0” எனக் கருதப்படும் இது வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டண வசூலிப்பு, எரிபொருள் கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக தேசிய சிறு தொழிற்சாலைகள் கழகம் (National Small Industries Corporation - NSIC) மற்றும் சவுதி அரம்கோ (சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனம்) ஆகியவற்றிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
ஆயுதங்கள் மற்றும் இராணுவ சேவைகளை விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் உலகில் உள்ள ஆயுதங்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய 100 நிறுவனங்களில் முதல் 5 இடங்களில் இடம் பிடித்துள்ளன என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனமானது (SIPRI - Stockholm International Peace Research Institute) அறிக்கை அளித்துள்ளது.
முழுவதும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய உலகின் முதலாவது வணிக ரீதியான விமானமானது கனடாவின் வான்கூவரில் இருந்து சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது.
இந்த மின்சாரத்தால் இயங்கும் விமானமானது ஹார்பர் விமான நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.