அருணாச்சலப் பிரதேசத்தைச் சுற்றுலா மற்றும் சாகச விளையாட்டுகளின் இடமாக மேம்படுத்துவதற்காக, அம்மாநில முதலமைச்சரான பெமா காண்டு மேல் சியாங் மாவட்டத்தின் தலைமையகமான யிங்கியோங்கிலிருந்து கிழக்கு சியாங் மாவட்டத்தின் தலைமையகமான பாசிகாட் வரை 122 கி.மீ தூரத்திற்கு இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.
இந்தப் பாதையானது சியாங் பள்ளத்தாக்கு மற்றும் ஆதிப் பழங்குடியினரின் கிராமங்கள் ஆகியவற்றின் சிறந்த அழகிய காட்சிகளை எடுத்துக் காட்டுகின்றது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி டிசம்பர் 1 ஆம் தேதியிலிருந்து, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள சுங்கச் சாவடியின் சாளரங்கள் ஒவ்வொரு வாகனத்திலும் உள்ள RFID (radio-frequency identification) சில்லுகளான FASTagஐ ஏற்கத் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தமுள்ள 527 சுங்கச் சாவடிகளில், 380 சுங்கச் சாவடிகள் அதன் அனைத்து பாதைகளிலும் FASTagஐப் பெற்றுள்ளன.
உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாக ஓய்வு பெறும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிக்கு கிடைக்கக்கூடிய ஓய்வூதிய சலுகைகளைப் பெற "உரிமை இல்லை" என்று உச்ச நீதிமன்றம் கருதுகின்றது.
அது மேலும் கூறுகையில், "வரையறுக்கப்பட்ட ஊதியத்திற்காக மட்டுமே, அத்தகைய தற்காலிகத் தலைமை நீதிபதி தலைமை நீதிபதிக்கு இணையாக நடத்தப் படுகிறார் என்றும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல” என்றும் கூறியுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த இளம் வயது காலநிலை மாற்ற ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க் மற்றும் கேமரூனைச் சேர்ந்த 14 வயது அமைதித் தூதுவரான டிவினா மலூம் ஆகியோருக்கு டச்சு அமைப்பால் சர்வதேச குழந்தைகள் அமைதிப் பரிசு வழங்கப் பட்டுள்ளது.
நவம்பர் 20 ஆம் தேதி தி ஹேக்கில் நடைபெறும் விருது வழங்கும் ஒரு விழாவில் இந்தப் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.
ஹகிபிஸ் சூறாவளியானது (அதன் பொருள்: பிலிப்பைன்ஸ் மொழியான டாக்லாக் மொழியில் "வேகம்" என்று பொருள்படும்) சமீபத்திய காலங்களில் ஜப்பானைத் தாக்கிய மிக மோசமான சூறாவளியாக மாறியுள்ளதுடன், அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை ஏற்படுத்தி லட்சக்கணக்கான மக்களைப் பாதித்துள்ளது.
மும்பையில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Board of Control for Cricket in India - BCCI) தலைவர் பதவிக்கு இந்தியாவின் முன்னாள் அணித் தலைவரான சவுரவ் கங்குலி விண்ணப்பித்த பின்னர் அந்த வாரியத்தின் புதிய தலைவராக அவர் அறிவிக்கப் பட்டுள்ளார். அந்த அமைப்பின் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவின் மகன் ஜே ஷா பதவியேற்க உள்ளார்.
இந்த வாரியத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்த ஒரே நபர் சவுரவ் கங்குலி ஆவார். எனவே BCCIன் தலைவர் பதவிக்கு அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றார்.