இந்திய ரிசர்வ் வங்கியானது இரு மாதத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும் தனது ஐந்தாவது நிதிக் கொள்கையில் ரெப்போ வட்டி வீதத்தை 5.15% ஆகவும் மாற்று ரெப்போ வட்டி வீதத்தை 4.90% ஆகவும் வங்கி வீதத்தை 5.40% ஆகவும் தொடர்ந்து மாற்றாமல் அதே அளவில் வைத்திருக்கின்றது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சக்தி காந்த தாஸ் தலைமையிலான ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நிதிக் கொள்கைக் குழுவானது (Monetary Policy Committee - MPC) ஒருமனதாக இந்த நிதிக் கொள்கைக்கு வாக்களித்துள்ளது.
இந்திய நடிகையான பிரியங்கா சோப்ராவுக்கு யுனிசெப் அமைப்பினால் டேனி கே மனிதாபிமான விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு நல்லெண்ணத் தூதராக கடந்த 15 ஆண்டுகளாக யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து பணியாற்றுகின்றார்.
சென்னை, ஜெய்ப்பூர், கட்டாக், கொச்சி, இந்தூர் மற்றும் அமராவதி ஆகிய நகரங்களில் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் ஐந்து அமர்வுகளை அமைக்க மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் சுவிட்சர்லாந்தில் தனது சிறப்புத்துவத்திற்காக உயிருடன் இருக்கும் காலத்திலேயே தனது உருவம் பொறித்த நாணயத்தைக் கொண்ட முதலாவது நபராக உருவெடுத்துள்ளார். சுவிட்சர்லாந்தின் பெடரல் நாணய அச்சடிப்பு அமைப்பான சுவிஸ்மின்ட் ஆனது பெடரரின் படத்தைக் கொண்ட 20 பிராங்க் வெள்ளி நாணயத்தை உருவாக்கியுள்ளது.
சுவிஸ்மின்ட் அமைப்பானது உயிருடன் இருக்கும் ஒரு நபரை கௌரவிப்பதற்காக அவருடைய நினைவாக ஒரு நாணயத்தை உருவாக்கியது அதன் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.