TNPSC Thervupettagam

ஆயில் இந்தியா நிறுவனம் - மகாரத்னா நிறுவன அந்தஸ்து

August 8 , 2023 346 days 361 0
  • நிதித் துறை அமைச்சகமானது ஆயில் இந்தியா மற்றும் ONGC விதேஷ் ஆகிய இரண்டு எண்ணெய் உற்பத்தித் துறை நிறுவனங்களை முறையே மத்தியப் பொதுத் துறை நிறுவனங்களின் (CPSEs) மகாரத்னா மற்றும் நவரத்னா வகை நிறுவனங்களாக தரம் உயர்த்தியுள்ளது.
  • இந்திய நாட்டிற்குள்ளும், வெளிநாட்டிலும் பெரிய அளவிலான முதலீடுகள் மேற் கொள்ளப் படுவது குறித்து அந்த நிறுவனங்கள் தன்னிச்சையாக முடிவுகளை மேற் கொள்வதற்கு இந்தப் புதிய அந்தஸ்து உதவும்.
  • ஆயில் இந்தியா நிறுவனமானது முன்னதாக நவரத்னா நிறுவனமாகவும் ONGC விதேஷ் நிறுவனமானது மினிரத்னா நிறுவனமாகவும் இருந்தன.
  • மத்தியப் பொதுத் துறை நிறுவனங்களில் ஆயில் இந்தியா நிறுவனம் ஆனது 13வது மகாரத்னா நிறுவனமாக இருக்கும்.
  • இந்தியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப் பட்ட ஒரு ஆண்டான 1889 ஆம் ஆண்டில் இது நிறுவப் பட்டது.
  • இந்திய அரசுக்குச் சொந்தமான இந்த நிறுவனமானது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
  • ஆயில் இந்தியா நிறுவனமானது இந்தியாவில் உள்ள இரண்டாவது பெரிய தேசிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனமாகும்.
  • மஹாரத்னா அந்தஸ்து வழங்கீட்டு திட்டமானது மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் தமது செயல்பாடுகளை விரிவுபடுத்தச் செய்வதற்கும் அவற்றினை ஓர் உலகளவிலான மாபெரும் நிறுவனங்களாக மேம்படுத்தச் செய்வதற்கும் என்று அவற்றிற்கு அதிகாரம் அளிப்பதற்காக 2010 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • நவரத்னா அந்தஸ்தினை கொண்டுள்ள பொது நிறுவனங்கள்; இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் விதிமுறைகளின் கீழ் குறைந்த பட்ச அளவில் என்று பரிந்துரைக்கப் பட்ட பொதுப் பங்குகளுடன் இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்கள் போன்ற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மஹாரத்னா அந்தஸ்திற்குப் பரிசீலிக்கப்படும்.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் 2,500 கோடி ரூபாய்க்கும் மேலான சராசரி வருடாந்திர நிகர லாபம் கொண்ட மற்றும் உலகளவில் குறிப்பிடத்தக்க அளவிலான செயல்பாடுகளைக் கொண்ட அல்லது சர்வதேச அளவில் பல செயல்பாடுகளைக் கொண்ட நிறுவனங்கள் ஆகியனவும் பரிசீலிக்கப் படும் .
  • மத்தியப் பொதுத் துறை நிறுவனங்களில் ONGC விதேஷ் நிறுவனமானது 14வது நவரத்னா நிறுவனமாக இருக்கும்.
  • நவரத்னா அந்தஸ்து பெற்ற ஒரு மத்தியப் பொதுத்துறை நிறுவனமானது, புதியப் பொருட்களை வாங்குவதற்கும் அல்லது மாற்றுவதற்கும் எந்த வித நிதி உச்ச வரம்பும் இல்லாமல் தனது மூலதனச் செலவை மேற்கொள்ள இயலும்.
  • இது தொழில்நுட்ப துணிகரக் கூட்டு முதலீடுகள் அல்லது உத்திசார் கூட்டணிகளை மேற்கொள்ள இயலும் என்பதோடு, இது கொள்முதல் அல்லது பிற ஏற்பாடுகளைப் பெறவும் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பகிர்வினைப் பெறவும் இயலும்.
  • இது இந்திய ரிசர்வ் வங்கி/பொருளாதார விவகாரங்கள் துறையின் ஒப்புதலுக்கு உட்பட்டு, உள்நாட்டு மூலதனச் சந்தைகள் மற்றும் சர்வதேசச் சந்தைகளில் இருந்து கடன் பெற முடியும்.
  • இதன் மூலம் அவை இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ 1,000 கோடி ரூபாய் என்ற முதலீட்டு உச்ச வரம்பிற்குள், நிதிசார் கூட்டுத் துணிகர முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் முழு உரிமம் கொண்ட துணை நிறுவனங்களை நிறுவ முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்