உவர் நீர் நிலைகளில் மீன் வளர்க்கும் திட்டம்: காஞ்சிபுரத்தில் சாதனை
August 6 , 2017 2796 days 1379 0
உவர் நீர் நிலைகளில் வலைக் கூண்டுகள் அமைத்து முத்தொடர் முறையில் மீன் வளர்க்கும் தொழில்நுட்பம் இந்திய அளவில் முதன்முதலாக காஞ்சிபுரம் அருகே வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை நிறுவனமான மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் (Central Institute of Brackish water Aquaculture - CIBA) சார்பில், கடல் முகத்துவாரப் பகுதியான உவர் நீர் நிலைகளிலும் மீன்களை வளர்க்க முடியும் என்கிற தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து புதிய திட்டம் செயல்முறைக்கு வந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில் அப்துல் கலாம் மீன்பிடிப்பாளர்கள் மகளிர் சுய உதவிக் குழுவுடன் இணைந்து, உவர்நீர் நிலைகளில் மீன்களைப் பிடிக்கும் திட்டம் இந்திய அளவில் முதன்முறையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதற்கு முன்பு வரை கடலில் ஆழமான மாசற்ற நீர் நிலைகளில் தான் வலைக்கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்க முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது இதை மாற்றியமைத்து உவர் நீர்நிலைகளிலும் வலைக்கூண்டுகள் அமைத்து முத்தொடர் முறையில் மீன்கள் வளர்க்க முடியும் என்ற நிலைக்கு மாறியுள்ளது.