- 2018 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்ட நீதிபதி அமித்தவா ராய் (ஓய்வு) குழுவானது சிறைச்சாலைகளுக்கான சீர்திருத்தங்கள் குறித்த பரிந்துரைகள் அடங்கியப் பட்டியலை வழங்கியுள்ளது.
- இந்தியாவிலுள்ள சிறைச்சாலைகளில் காணப்படும் பல்வேறு பிரச்சனைகள், அதிகப் படியான கைதிகளின் எண்ணிக்கை (நெரிசல்) சார்ந்த பிரச்சினை முதல் குற்றவாளிகளுக்கான தண்டனைக் குறைப்பு மற்றும் சிறைவாச விடுமுறை வழங்கீடு ஆகியவை குறித்த முறையான சட்ட ஆலோசனையின்மைப் பிரச்சினைகள் வரை அனைத்து விவகாரங்கள் பற்றிய ஒரு ஆய்வினை மேற்கொள்ளச் செய்யுமாறு இந்தக் குழுவிற்குப் பணிக்கப் பட்டது.
குழுவின் கண்டுபிடிப்புகள்
- கோவா, டெல்லி மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறைகளில் மட்டுமே பெண் கைதிகள் தங்கள் குழந்தைகளை எந்தவிதமான கம்பிகளோ அல்லது கண்ணாடித் தடுப்புகளோ இல்லாமல் சந்திக்க அனுமதிக்கின்றன.
- 18% பெண் கைதிகள் மட்டுமே தங்களுக்கெனப் பிரத்தியேகமான பெண்கள் சிறை வசதிகளைப் பெறுகின்றனர்.
- 2021 ஆம் ஆண்டின் இறுதியில், இந்தியா முழுவதும் 22,918 பெண் கைதிகள் உள்ள நிலையில் இது மொத்தக் கைதிகளின் எண்ணிக்கையில் 4.13% ஆகும்.
- 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்திய சிறைகளில் உள்ள பெண் கைதிகளின் எண்ணிக்கை 11.7% அதிகரித்துள்ளதோடு, மேலும் 2019 ஆம் ஆண்டில் சிறையில் இருந்த மொத்தக் கைதிகளின் எண்ணிக்கையில் 4.2% பெண்கள் ஆவர்.
- 15 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் மட்டுமே முழு அளவில் இயங்கி வரும் பெண்கள் சிறைகள் உள்ளன.
- 2017 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் பதிவான 817 இயற்கைக்கு மாறான மரணங்களுக்கு தற்கொலை மிகவும் முக்கியக் காரணமாக பதிவாகியுள்ளது.
- இந்த 817 இயற்கைக்கு மாறான மரணங்களில், சுமார் 660 தற்கொலைகள் ஆக உள்ள நிலையில் இந்தக் காலகட்டத்தில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் சிறைகளில் 101 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
- உலகளவில், மூன்று கைதிகளில் ஒருவர் விசாரணைக் கைதிகள் ஆவர்.
- இந்தியாவில், நான்கில் மூன்று பேர், அதாவது 2021 ஆம் ஆண்டில் பதிவான மொத்த கைதிகளின் எண்ணிக்கையில் 77% பேர் விசாரணைக் கைதிகளாக இருந்தனர்.