மத்திய உள்துறை அமைச்சகமானது இந்தியத் தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக மூன்று புதிய மசோதாக்களை மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அவையாவன:
1860 ஆம் ஆண்டு இந்தியத் தண்டனைச் சட்டத்திற்கு மாற்றாக பாரதீய நியாய சன்ஹிதா, 2023,
1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு மாற்றாக பாரதீய நாகரிக் சுரக்சா சன்ஹிதா, 2023,
1872 ஆம் ஆண்டு இந்தியச் சாட்சியச் சட்டத்திற்கு மாற்றாக பாரதீய சாக்சய மசோதா, 2023.
இந்தியத் தண்டனைச் சட்டத்தில் இருந்து பெறப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட 175 பிரிவுகளோடு சேர்த்து, பாரதீய நியாய சன்ஹிதா மசோதாவில் (BNS) 356 பிரிவுகள் உள்ளன.
இதில் 22 பிரிவுகள் ரத்து செய்யப் பட்டு, 8 புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாளுவது தொடர்பான புதிய அத்தியாயம் சேர்க்கப் பட்டுள்ளது.
சமூக சேவை செய்வதை, சிறு சிறு குற்றங்களுக்கான தண்டனையாக விதிக்கும் ஒரு விதிமுறையை இந்த மசோதா அறிமுகப்படுத்தியுள்ளது.
திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் குற்றங்கள் ஆனது முதன்முறையாக தண்டனைச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட உள்ளது.
அடுத்தப் படியாக, இந்தச் சட்டத்தின் கீழ் 'தீவிரவாத நடவடிக்கை' என்பதும் முதன் முறையாக வரையறுக்கப் பட்டுள்ளது.
இது "இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்குப் பாதகத்தினை விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு" தண்டனை விதிக்கும் 150வது சட்டப் பிரிவினைக் கொண்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமானது, இயற்கைக்கு மாறான பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த விதிமுறைகளைக் கொண்டிருக்கவில்லை.
எனினும் முன்மொழியப் பட்டுள்ள இந்தச் சட்டத்தின் கீழ், மாற்றார் மனை கூடல் தொடர்பு (கள்ளத் தொடர்பு) ஆனது இனி குற்றமாக கருதப் படாது.
மிரட்டிப் பணம் பறித்தல் குற்றத்திற்கான தண்டனை அதிகரிக்கப் பட்டுள்ளது.