மாநிலப் பேரிடர் மீட்பு நிதியின் (SDRF– State Disaster Response Fund) மூலம் நிதியுதவியை அளிக்கும் நோக்கத்திற்காக கோவிட் – 19 நோயை “அறிவிக்கப்பட்ட பேரிடராக” அறிவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்த நிதியானது பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ் அந்தந்த மாநிலங்களால் அமைக்கப்பட்டுள்ளது. இது “அறிவிக்கப்பட்ட பேரிடர்களை” கையாளுவதற்காக மாநில அரசுகளிடம் இருக்கும் ஒரு முதன்மையான நிதி ஆதாரமாகும்.
பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், மாநிலஅரசுகள்/ஒன்றியப் பிரதேசங்கள் மாநில அரசிடம் இருந்து பெறப்படும் நிதியைத் தவிர, கூடுதலாக மாநிலப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும் நிதியைப் பெற முடியும்.
இச்சட்டத்தின்படி, மாநிலப் பேரிடர் மீட்பு நிதியானது 2005 ஆம் ஆண்டின் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் “அறிவிக்கப்பட்ட பேரிடர்களுக்கு” மட்டுமே பயன்படுத்த முடியும்.
பொதுப்பிரிவு மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களுக்கான SDRF நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு 75 சதவிகித நிதியையும் வடகிழக்கு மாநிலங்கள், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கான SDRF நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு 90 சதவிகித நிதியையும் அளிக்கும்.
SDRF ஆனது “ஒதுக்கப்பட்ட நிதியின்” கீழ் பொதுக் கணக்கில் உள்ளது.
ஆனால் நேரடிச் செலவினங்களை பொதுக் கணக்கு நிதியிலிருந்து மேற்கொள்ளக்கூடாது.
SDRF-ற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதி “உதவியாகக் கொடுக்கும் நிதியாக” கருதப்படும்.
மத்திய உள்துறை அமைச்சகமானது SDRF-ன் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் தலைமை அமைச்சகமாகும். மேலும் இது குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதையும் கண்காணிக்கும்.
இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) ஒவ்வொரு ஆண்டும் SDRFஐ தணிக்கை செய்கின்றார்.
சூறாவளிகள், வறட்சி, சுனாமி, ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பனிப்பாறைச் சரிவுகள், பூச்சித் தாக்குதல்கள் போன்றவை SDRFன் கீழ் உள்ளடங்கும்.
பேரிடர் சார்ந்த 31 பிரிவுகள் முக்கியமான 5 துணைக் குழுக்களின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அவையாவன: நீர் மற்றும் காலநிலை தொடர்பான பேரிடர்கள், புவியியல் சார்ந்த பேரிடர்கள், இரசாயன, தொழிற்துறை மற்றும் அணு ஆயுதம் தொடர்பான பேரிடர்கள், உயிரியல் சார்ந்த பேரிடர்கள் (உயிரியல் பேரிடர்கள் மற்றும் தொற்று நோய்கள்) ஆகியவையாகும்.
தற்போதையநிலை
கரோனா வைரஸ் நோயை எதிர்த்துப் போராடுவதற்காக நிதியை ஒதுக்கிய இந்தியாவின் முதலாவது மாநிலம் ஒடிசா ஆகும்.
ஒடிசா மாநிலமானது இந்தக் கொடிய நோயை எதிர்த்துப் போராடுவதற்காக ரூ.200 கோடியை ஒதுக்கியுள்ளது.
இந்தக் கொடிய நோயை எதிர்த்துப் போராடுவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.60 கோடியை ஒதுக்கியுள்ளது.