ராஜஸ்தான் மாநில அரசு சட்டப்பேரவையில் ராஜஸ்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சட்டத்திருத்த மசோதா – 2019 என்ற மசோதாவை அறிமுகம் செய்தது.
இது அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 5 சதவிகித இடஒதுக்கீட்டை அதற்காகப் போராடும் குஜ்ஜார் சமூகத்தினருக்கும் இன்னபிற நான்கு சமூகத்தினருக்கும் அளிப்பதற்கு எண்ணுகின்றது.
இம்மசோதா பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை தற்போது உள்ள 21 சதவிகிதத்திலிருந்து குஜ்ஜார்கள், பஞ்சாராக்கள், கடியா லோகர்கள், ரைகர்கள் மற்றும் கடாரியாக்கள் ஆகியோருக்கு 5 சதவிகித இடஒதுக்கீட்டுடன் சேர்த்து மொத்த அளவை 26 சதவிகிதமாக உயர்த்தக் கோருகின்றது.
இம்மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் மேலே கூறிய ஐந்து சாதியினரும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும் 5 சதவிகித தனிப்பட்ட இடஒதுக்கீடு அவர்களுக்குத் தேவை என்றும் கூறுகின்றது.
இந்த இட ஒதுக்கீட்டுடன் சேர்த்து ராஜஸ்தானின் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டு சதவிகிதம் உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 50 சதவிகித வரம்பை மீறுகின்றது.
மேலும் சட்டப்பூர்வமாக நிகழக்கூடிய ஒரு தடையைத் தவிர்த்திடும் வகையில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை அச்சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்திட அம்மசோதாவை 9வது பட்டியலில் இணைத்துக் கொள்ள மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதற்கான ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கின்றது.
50 சதவிகிதத்திற்கும் அதிகமாக
ஏற்கெனவே தமிழ்நாடு 69 சதவிகித இடஒதுக்கீட்டை அளித்துக் கொண்டிருக்கின்றது.
மகாராஷ்டிரா மாநில அரசு ஏற்கனவே உள்ள 52 சதவிகித இடஒதுக்கீட்டுடன் கூடுதலாக 10 சதவிகிதத்தை மராத்தா சமூகத்தினருக்கு அளிக்கும் வகையில் நவம்பர் 2018 சமயத்தில் ஒரு சட்டம் இயற்றியது. இதன் மூலம் இரண்டாவது மிக அதிகமான அளவாக 68 சதவிகிதத்திற்கு இடஒதுக்கீடு அளிக்கும் மாநிலமாக அது உருவெடுத்தது.
மேலும் அரியானா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் முறையே 67, 62, 55 சதவிகிதம் என்ற அளவில் இடஒதுக்கீடு வழங்க சட்டங்கள் இயற்றியிருக்கின்றன.